Friday, February 7, 2014

பாலியல் தொழில் செய்ய பாதுகாப்பான இடம் வேண்டும்

சகல வசதிகளுடன் பாலியல் தொழில் செய்ய பாதுகாப்பான இடம் வேண்டும் அரசுக்கு, பாலியல் தொழிலாளர்கள் கோரிக்கை

சென்னை,

ஏ.டி.எம்.வசதி உள்பட சகல வசதிகளுடன் பாலியல் தொழில் செய்ய பாதுகாப்பான இடத்தை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்று அரசுக்கு, பாலியல் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலியல் தொழிலாளர்கள் கருத்தரங்கம்

இந்திரா பெண் முன்மாதிரி கல்வியாளர்கள் நலச்சங்கத்தின் (பாலியல் தொழிலாளர்கள் சங்கம்) கருத்தரங்க கூட்டம் சென்னை எழும்பூர் ‘இக்ஸா’ மையத்தில் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கிற்கு சங்கத்தின் தலைவர் பி.பேபி தலைமை தாங்கினார். செயலாளர் கே.கலைவாணி, பொருளாளர் பி.என்.சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கில் செயலாளர் கே.கலைவாணி பேசியதாவது:–

சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் சங்கத்தை சேர்ந்த 2,312 பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். சென்னையில் மட்டும் 1,800 பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். பாலியல் தொழிலை சட்ட விரோத தொழில் என்று சொல்வதே தவறு ஆகும். வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுத்து தொழிலுக்கு அழைத்தால் தான் தவறு.

பாதுகாப்பான இடம்

பாலியல் தொழிலாளர்கள் தியாகராய நகர், பாரிமுனை, மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் நின்று தொழில் செய்ய முடியவில்லை. போலீசார் ‘கெடுபிடி’ அதிகமாக உள்ளது. இரவுநேரங்களில் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.

எனவே பாலியல் தொழில் செய்வதற்காக அத்தியாவசிய வசதிகளான மின்சாரம், குடிநீர், கிளினிக், பெண் காவலர் வசதி, தங்கும் வசதி, கேண்டீன், போன் வசதி, பண பரிமாற்றத்துக்காக வங்கி, மற்றும் ஏ.டி.எம். வசதி, போக்குவரத்து வசதி உள்பட சகல வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான இடத்தை அரசு வழங்க வேண்டும்.

பயிற்சிகள்

பாலியல் தொழில்புரிவதற்கு பாதுகாப்பான இடம் ஒதுக்கப்படுவதன் மூலமாக காவல்துறை பிரச்சினை இருக்காது. மக்களால் இடையூறு இருக்காது. வாடிகையாளர்கள் ஏமாற்ற முடியாது, தரகரால் பிரச்சினை இருக்காது. குரூப் பாலியல் தொழில் இருக்காது.

பாலியல் தொழிலாளர்களுக்காக வழக்கறிஞர் உதவிகள் மையம், சுயதொழில் செய்வதற்கு கைத்தொழில் பயிற்சி மற்றும் கணினி பயிற்சி, ஓட்டுனர் பயிற்சி மையத்தையும் ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு கே.கலைவாணி கூறினார்.

ஒன இந்தியா 

No comments:

Post a Comment