Sunday, August 31, 2014

விபத்துகளில் பலியான 14 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம்: ஜெயலலிதா


தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுவர் இடிந்து விழுந்தும், விஷவாயு தாக்கியும் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
திருக்கோவிலூர், தகடி கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பனின் மகன்கள் சிவகண்டன், பூமிநாதன் இருவரும் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தனர்.
வேதாரண்யம், வெள்ளப்பள்ளம் ஊராட்சியைச் சேர்ந்த முருகையனின் மனைவி கருப்பாச்சி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பால் காலமானார்.
சென்னை பாடியைச் சேர்ந்த சுப்பிரமணியின் மகன் முருகன், ராமச்சந்திரனின் மகன் பாஸ்கரன் ஆகிய இருவரும் அம்பத்தூர், கஞ்சனாகுப்பம் பகுதி அருகே கழிவு நீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
மாதவரம் செங்குன்றம் நெடுஞ்சாலை அருகில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சிமெண்ட் சுவர் இடையே சிக்கி, பெரியார் நகர் ஜி.கே.எம். காலனியைச் சேர்ந்த பொன்னுசாமியின் மகன் முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை கொய்யாத்தோப்பு, குடிசைப்பகுதி மாற்று வாரியக் குடியிருப்பில் வசித்து வந்த மாநகராட்சி துப்புரவுப் பணியாளர் சீனிவாசன் பணியில் இருந்தபோது மயக்கம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தூத்துக்குடி அன்னை தெரசா மீனவர் காலனியில் கிணற்றில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விஷவாயு தாக்கியதில் மாரியப்பனின் மகன் கலையரசன், சுப்பையாவின் மகன் மாரியப்பன், அமலதாசனின் மகன் பீட்டர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சங்கரன்கோவில், தெற்கு குருவிக்குளம் கிராமம் அருகே மின்னல் தாக்கியதில் வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கடற்கரையின் மகன் கருப்பையா, வடக்கு குருவிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சின்னகுருசாமியின் மகன் நம்பிராஜன், செங்கோட்டை வட்டம், நெடுவயல் கிராமத்தைச் சேர்ந்த மாடசாமியின் மகன் சங்கர் கணேஷ் ஆகியோர் உயிரிழந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், பல்லிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த நயினாரின் மனைவி பாப்பாத்தி மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்தச் செய்திகளைக் கேட்டு நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த சம்பவங்களில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.
இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
நன்றி :தினமணி

காதலித்த மகளுக்கு சூடு போட்ட டி.எஸ்.பி. மீது வழக்கு


சென்னை இராயப்பேட்டையில் மகளுக்குச் சூடு வைத்துக் கொடுமைப்படுத்தியதாக இரயில்வே காவல் துணைக்கண்காணிப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
இராயப்பேட்டையைச் சேர்ந்தவர்  தனவேல் இவர் தமிழக இரயில்வே காவல்துறையில் திருச்சி துணைக் காவல் கண்காணிப்பாளராக உள்ளார். தனவேலின் 24 வயது மகள் கடந்த 28-ம் தேதி இராயப்பேட்டை மருத்துவமனையில் கை,கால்,தலை,இடுப்பு ஆகியப் பகுதிகளில் ரத்தக் காயங்களுடனும், தீ காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரிடம் போலீஸார் விசாரணை செய்ததில், தான் காதலிப்பதாகவும், இந்தக் காதல் தனது தந்தைக்குப் பிடிக்காததால் கிரிக்கெட் மட்டையால் தாக்கி, இரும்புக் கம்பியால் உடலில் சூடு வைத்ததாகவும் அவர் தெரிவித்தாராம். மேலும், இதுகுறித்து அவர், இராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் இராயப்பேட்டை போலீஸார், மகளைக் கொடுமைப்படுத்தியதாக தனவேல் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். தனவேலின் மகள் ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வருவது குறிப்பிடதக்கது.
நன்றி : தினமணி

நீதிபதி வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் திருட்டு


சென்னை எழும்பூரில் நீதிபதி வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
எழும்பூர் பாந்தியன் சாலையில் பழைய காவல் ஆணையர் அலுவலகம் அருகே நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் 60 நீதிபதியின் வீடுகள் உள்ளன. இங்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தக் குடியிருப்பில் டி பிளாக்கில் 3-ஆவது தளத்தில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டின் டேவிட், தனது குடும்பத்தினரோடு வசித்து வந்தார்.
டேவிட், கடந்த வியாழக்கிழமை குடும்பத்தினரோடு தனது சொந்த ஊரான நாகர்கோவிலுக்குச் சென்றார். இந்நிலையில், இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் தடா நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் வெள்ளிக்கிழமை இரவு, டேவிட்டின் வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர், பெருநகர காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று விசாரித்தனர். விசாரணையில் அவரது வீட்டு பீரோவை உடைத்து, அதில் இருந்த 30 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான கைரேகைகள் பதிவு செய்தனர். இதுகுறித்து எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பலத்த பாதுகாப்பை மீறி..
நீதிபதிகள் குடியிருப்பு பின்பகுதியில் எழும்பூர் நீதிமன்ற வளாகம் உள்ளது. குடியிருப்பையொட்டி உள்ள பழைய ஆணையர் அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகம், பெருநகர காவல்துறையின் வடக்கு, கிழக்கு மண்டலங்களின் இணை ஆணையர்களின் அலுவலகங்கள், ஆயுதப்படை வீரர்களின் பாரக்ஸ், குதிரைப்படை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதனால் அந்தப் பகுதியில் எப்போதும் போலீஸாரின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
இதன் காரணமாக நீதிபதிகள் குடியிருப்பு மிகுந்த பாதுகாப்புமிக்க பகுதியாக கருதப்பட்டது. ஆனால், அனைத்து பாதுகாப்புகளையும் மீறி நீதிபதி வீட்டில் நகைகள் திருடப்பட்டிருப்பது காவல்துறையினரிடமும் பொதுமக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : தினமணி

பணம், வீடு கேட்டு கணவருக்கு கொலை மிரட்டல்: மனைவி மீது வழக்கு


கணவரிடம் ரூ.25 லட்சம் பணம், வீட்டை தன் பெயருக்கு எழுதி வைக்கக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக மனைவி மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டை தலைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் ஸ்ரீராம்(28). இவர் புணேயில்தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றுகிறார். இவருக்கும் மகாராஜபுரத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் மகள் லோகா (27)வுக்கும் கடந்த 14.2.2013 அன்று பெற்றோர் ஏற்பாட்டில் திருமணம் நடைபெற்றதாம். இருவரும் புணேயில் 3 மாதங்கள் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.
இதற்கிடையே லோகா, கணவரிடம் சண்டை போட்டு ரூ.25 லட்சம் பணம் அவரது பெயரில் சொந்த ஊரில் உள்ள பூர்வீக வீட்டை தனது பெயரில் மாற்றித் தந்தால் தான் சேர்ந்து வாழ முடியும் எனக் கூறி தந்தை வீட்டுக்கு வந்து விட்டாராம்.
கடந்த 4.4.2014 அன்று லோகா ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், தனது கணவர் வீட்டார் தான் திருமணத்தின் போது போட்டு வந்த நகையில் 40 பவுனை அடகு வைத்து தனக்கு சாப்பாடு போடாமல் கொடுமைப்படுத்தியதாக தெரிவித்திருந்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் லோகாவுக்கும் மற்றொருவருக்கும் 7.12.2007இல் திருமணம் நடைபெற்றுள்ளதாகவும், இத் திருமணம் சென்னை சென்ட்ரல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவாகியுள்ளதாகவும் அஸ்வின்ஸ்ரீராம் தெரிந்துள்ளார். இதையடுத்து அஸ்வின்ஸ்ரீராம் குடும்பத்தினர், லோகா குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துள்ளனர்.
இரு தரப்பினரும் ஞாயிற்றுக்கிழமை ராஜபாளையத்தில் பேச்சுவார்தை நடத்தினராம். அப்போது லோகா மற்றும் அவரது உறவினர்கள் அஸ்வின்ஸ்ரீராம் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ரூ.25 லட்சம் பணம், அவரது பெயரில் உள்ள சொந்த வீட்டை லோகா பெயருக்கு மாற்றித் தராவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்களாம். இதையடுத்து அஸ்வின் ஸ்ரீராம் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, லோகா மற்றும் அவரது தாயார் சீதாலட்சுமி, தாத்தா ஜெயக்குமார், அக்காள் கெüசிகா மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
 நன்றி : தினமணி

இராமநாதபுரம் அருகே சுற்றுலா பேருந்தில் தீ: 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி



இராமநாதபுரம் அருகே சுற்றுலாப் பேருந்தில் இருந்த சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து தீ பரவியதில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.


மேற்கு வங்க மாநிலம் பாக்கோடா மாவட்டத்தில் உள்ள கோடல்பூரிலிருந்து கூக்ளி, ஹவுரா, பத்துவான் மாவட்டங்களைச் சேர்ந்த 77 பேர் கடந்த 22 ஆம் தேதி பேருந்து ஒன்றில் யாத்திரை பயணம் மேற்கொண்டனர். பல்வேறு மாநிலங்கள் வழியாக திருப்பதி வந்த இவர்களுடன் காஞ்சிபுரத்தை சேர்ந்த சீனிவாசன் என்ற சுற்றுலா வழிகாட்டியும் இணைந்துள்ளார்.

இவரது வழிகாட்டுதலோடு காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், மகாபலிபுரம், சென்னை, புதுச்சேரி வழியாக ஸ்ரீரங்கம் வந்துள்ளனர். அங்கிருந்து கிளம்பிய இவர்கள் 29 ஆம் தேதி இரவு இராமேஸ்வரம் வந்துள்ளனர்.

யாத்திரை பயணம் மேற்கொள்ளும் இடங்களில் தங்களுக்கு தேவையான உணவுகளை சமையல் செய்துகொள்ளும் வகையில் ஸ்டவ் அடுப்பு, காஸ் சிலிண்டர்கள், பாத்திரங்கள் மற்றும் உணவு பொருட்களையும் பேருந்தில் எடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் பயணம் செய்த பேருந்து இன்று ராமநாதபுரம் திருப்புல்லாணிக்கு வந்தது. அப்போது பேருந்தில் இருந்த சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் மூன்று குழந்தைகள் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் இருந்து உயிர் தப்பியவர்கள் அனைவரும் திருப்புல்லாணியில் உள்ள பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நன்றி : தி இந்து

Thursday, August 28, 2014

மதுரையில் வலைப்பதிவர் திருவிழா - 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை

part 1 photo PARTIMAGE.jpgpart 2 photo PARTIMAGE2.jpgpart 3 photo PARTIMAGE3.jpgpart 4 photo PARTIMAGE4.jpgpart 5 photo PARTIMAGE5.jpgpart6 photo PARTIMAGE56.jpgpart 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpgpart 9 photo PARTIMAGE9.jpgpart 10 photo PARTIMAGE10.jpgpart 11 photo PARTIMAGE11.jpgpart 12 photo PARTIMAGE12.jpgpart 13 photo PARTIMAGE13.jpgpart 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg photo PARTIMAGE16.jpg
தமிழ்ப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26-ம் நாள் அன்றும், 2013 செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அன்றும் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்பை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அதே போல்.....

மூன்றாம் ஆண்டு பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் ஆரம்பித்து விட்டன...

நாள் : அக்டோபர் 26-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம் : மாரியம்மன் தெப்பக்குளம் மேலவீதியிலுள்ள கீதா நடனகோபால நாயகி மந்திர், மதுரை.

வாருங்கள் வலைப்பதிவர்களே... வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில் பங்கேற்கும் பதிவர்கள் அனைவரும் கீழுள்ள படிவத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பினால் போதும்...

படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் 15.10.2014 ஏதேனும் சந்தேகங்கள், விவரங்கள் தேவைப்பட்டால் :- திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com தமிழ்வாசி பிரகாஷ் -9080780981 - thaiprakash1@gmail.com

நூல் வெளியீடு : பதிவர்கள் தங்களின் நூல்களை இந்த மாபெரும் நிகழ்ச்சியில் வெளியிடலாம். அவ்வாறு நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 10.10.2014 க்குள் விவரங்களை கீழ்கண்ட நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள். சீனா ஐயா (வலைச்சரம்) cheenakay@gmail.com திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com

அன்பளிப்பு : இந்தச் சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பதிவர்கள், திண்டுக்கல் தனபாலன் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் அலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும். பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்துத் தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.


மேலும் தகவல்கள் / விபரங்கள் அடுத்தப் பதிவில் வெளியாகும். பதிவர்கள் இந்த விபரங்கள் குறித்து தங்களது வலைப்பதிவில் எழுதி அனைத்து பதிவர்களுக்கும் எடுத்துச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி. சந்திப்போம்.
வலைப்பதிவர் விழா நிர்வாகக் குழு - மதுரை
http://www.tamilvaasi.com/2014/08/261014.html

No comments:


Post a Comment