Friday, November 7, 2014

சென்னையில் 58 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம்


கீதாபவன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கூட்டமைப்பினர் ஒன்றிணைந்து 58 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு சென்னையில் நேற்று திருமணம் நடத்தி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில சமூகநலத்துறை அமைச்சர் பா. வளர்மதி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கூட்டமைப்பின் சார்பாக இந்த ஆண்டு 10 மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண சிறப்புமுகாம் நடந்தது. இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர், அவர்களில் 116 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சென்னையில் ஒரே இடத்தில் திருமணம் நடத்திவைக்கப்பட்டது. இந்த திருமணத்தில் அவர்களின் நூற்றுக்கணக்கான உறவினர்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் செயலாளர் டி. மகேஸ்வரி கூறும்போது, “திருமணத்துக்கு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு குடும்ப வாழ்க்கையை நடத்த தேவையான மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து அறிந்துகொள்ள கலந்தாய்வு, மனோதத்துவம், மருத்துவப் பரிசோதனை மற்றும் சட்ட ஆலோசனை ஆகியவை நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது” என்றார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வந்திருந்த சுரேஷ், மீனா தம்பதியினர் இந்தத் திருமணம் பற்றி கூறும்போது, “பல கனவுகளுடன் வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறோம். நடக்க முடியாத நாங்கள் வாழ்க்கைஓட்டத்தைத் தன்னம்பிக்கையுடன் சந்திக்க ஒன்றிணைந்து இருக்கிறோம்” என்றனர்.

ஸ்ரீகீதாபவன் டிரஸ்ட் சார்பில் சென்னை கோபாலபுரத்தில், 58 மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.


நன்றி :- தி இந்து

Thursday, November 6, 2014

உலக மசாலா: 1000 அடி நீளத்தில் கண்ணாடிப் பாலம்




சீனாவின் யுனான் மாகாணத்தில் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. 1,000 அடி நீளம் கொண்ட இந்தப் பாலம், மூன்று கால்பந்து மைதானங்களைக் கடக்கும் அளவுக்கு நீளமானது. பாலத்தின் அடிப்பகுதி கண்ணாடியால் அமைக்கப்பட்டு, 600 அடி கீழே இருக்கும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே செல்லும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்த்து வருகிறது இந்தக் கண்ணாடிப் பாலம். உயரத்தைக் கண்டு பயப்படுகிறவர்களுக்கு கண்ணாடியில் கால் வைத்தவுடன், பயத்தில் கால்கள் தொடர்ந்து நடக்க மறுக்கவும் செய்கிறது என்கிறார்கள்.

இந்தப் பாலத்தை எப்படி உருவாக்கியிருப்பாங்கன்னு நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை!

பிரிட்டனைச் சேர்ந்த டியானே லீ, 80 நாட்களில் யுனைட்டட் கிங்டம் முழுவதையும் சுற்றி வந்திருக்கிறார். 4,034 மைல்களை 31 ரயில்கள், 19 பேருந்துகள், 16 படகுகள், 13 கார்கள், 2 விமானங்களில் பயணம் செய்து முடித்திருக்கிறார். சின்ன வயதிலேயே கேன்சரால் தாயை இழந்த டியானே, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். பிறகு 30 வயதில் உணவு சாப்பிட முடியாத நோயால் அவதிப்பட்டார். 40 வயதில் தன் தாயைப் போல கேன்சர் நோயால் இறக்க நேரிடுமோ என்ற பயத்தில் உழன்றார். பிறகு தன்னை மீட்டெடுத்து, இதுபோன்ற சாகசப் பயணங்களில், பிறருக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் தன் வாழ்க்கையை மாற்றிக்கொண்டார். 80 நாட்களில் உலகப் பயணம் என்ற நாவலை எழுதிய புகழ் பெற்ற எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்னுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தப் பயணத்தைத் திட்டமிட்டு, நிறைவு செய்திருக்கிறார். தன்னுடைய பயணங்களைப் புத்தகமாகவும் எழுதி வருகிறார்.

வெல்டன் டியானே! நீங்களும் மீண்டெழுந்து, மத்தவங்களுக்கும் தன்னம்பிக்கை அளிக்கிறீங்க!

ஒரு காலத்தில் காஷ்மீர் கஸ்தூரி மானைப் போன்று 7 வகை மான்கள் ஆசியா முழுவதும் பரவியிருந்தன. மனிதர்களின் நடவடிக்கைகளால் இந்த இனம் அழிந்து வரக்கூடிய ஆபத்தான நிலைக்குச் சென்றுவிட்டது. 1948-ம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தானில் எந்த வகை கஸ்தூரி மான்களும் கண்டறியப்படவில்லை. 66 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது 2 கோரைப் பற்கள் வெளியே நீட்டிக்கொண்டிருக்கக்கூடிய கஸ்தூரி மான் கண்டறியப்பட்டுள்ளது.

இனிமேலாவது அந்த மானை, பத்திரமா பாதுகாத்தால் சரிதான்…

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல பாடகி கைட்டி மெலுவா. அவருடைய காதில் வித்தியாசமான சத்தமும், சில சமயங்களில் ஏதோ அசைவது போன்றும் தெரிந்தன. வேறு எந்தப் பிரச்சினையும் இல்லாததால் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை கைட்டி. ஒரு வாரத்தில் சத்தம் அதிகமானது. மருத்துவரைப் பார்த்தார். காதுக்குள் இருந்து ஒரு சிலந்தியை வெளியே எடுத்தார் மருத்துவர். இயர் போன் வழியாகக் காதுக்குள் நுழைந்திருக்கிறது சிலந்தி.

ஐயோ… ஒருவாரம் வரைக்குமா சிலந்தியைக் காதுக்குள் வச்சிருக்கிறது?


நன்றி :- தி இந்து

Tuesday, November 4, 2014

கோவை அருகே உதவி பேராசிரியை படுகொலை: போலீஸ் விசாரணை

கோவை அருகே உதவி பேராசிரியை படுகொலை: போலீஸ் விசாரணை

கோவை அருகே உதவி பேராசிரியை படுகொலை செய்யப்பட்டார். தடுக்க முயன்ற தாய்க்கும் வெட்டு விழுந்தது. பேராசிரியை கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை மாவட்டம் காரமடை கணேஷ்நகரை சேர்ந்தவர் தர்மராஜ். கோத்தகிரியில் மின்வாரிய இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாலதி. இவர்களது மகள்கள் ரம்யா (வயது 24), பிரேமா (17). ரம்யா என்ஜினீயரிங் படித்து விட்டு ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். ஈச்சனாரியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். விடுமுறை நாட்களில் தனது வீட்டுக்கு வருவது வழக்கம்.

பிரேமா கோத்தகிரியில் தந்தையுடன் தங்கி அங்கு பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று முஹர்ரம் விடுமுறை என்பதால் ரம்யா நேற்று முன்தினம் இரவு தனது வீட்டுக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். இரவு 9.30 மணிக்கு தர்மராஜ், ரம்யாவை செல்போனில் தொடர்பு கொண்டபோது, பஸ்சில் வீட்டுக்கு சென்று கொண்டிருப்பதாக கூறினார்.

அதன்பிறகு நேற்று காலை வரை தர்மராஜ் பலமுறை ரம்யாவை செல்போனில் தொடர்பு கொண்டும் மறுமுனையில் பதில் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த தர்மராஜ் கோத்தகிரியில் இருந்து உடனடியாக புறப்பட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டின் முன்பக்க கதவை தட்டியும் திறக்காததால், மதில் சுவரை ஏறிக்குதித்து வீட்டிற்குள் சென்றார். கதவை திறந்ததும் அவர் கண்ட காட்சி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

வீட்டின் முன்பக்க அறையில் அவரது மனைவி மாலதி ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். உள்ளே படுக்கையில் ரம்யா ரத்தவெள்ளத்தில் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் தர்மராஜ் கதறி அழுதபடி காரமடை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாலதியை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தடய அறிவியல் நிபுணர், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொலை நடந்த வீட்டில் கிடைத்த தடயங்கள் மற்றும் ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது, யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

விசாரணையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்ததும் ரம்யாவும், அவரது தாய் மாலதியும் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது யாரோ அடையாளம் தெரியாத சில மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் புகுந்து ரம்யாவை கூர்மையான கத்தி அல்லது அரிவாள் போன்ற ஆயுதத்தால் கழுத்து மற்றும் தலையில் தாக்கியதாக தெரிகிறது.

இதை தடுக்க சென்ற மாலதிக்கும் தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. தாய் மகள் 2 பேரும் கொலையாளிகளுடன் நீண்ட நேரம் போராடியதற்கான அறிகுறிகளும் காணப்பட்டது. பீரோ திறந்து கிடந்தது. விலை உயர்ந்த கேமரா மட்டும் திருட்டு போயுள்ளது. நகை, பணம் திருட்டு போகவில்லை. இதனால் திருட்டுக்காக இந்த கொலை நடக்கவில்லை. சிகிச்சை பெறும் ரம்யாவின் தாயிடம் விசாரணை நடத்தினால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கொலைக்கு முன்விரோதம் காரணமா? காதல் தகராறா? கொலையாளிகள் யார்? என்பது தெரியவில்லை. இந்த கொலையில் துப்புதுலக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள். கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு தான் ரம்யா கற்பழிக்கப்பட்டாரா? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

நன்றி :மாலை மலர்

Monday, November 3, 2014

மன முறிவால் வரும் மண முறிவு


திருமணம் என்பது வாழ்வில் முக்கிய கட்டம். "நான்' என்பது "நாம்' ஆகி "நாங்கள்' என்று வளரும் சிறப்பு. தன்னலம் தொலைந்த பொது நலத்தின் தொடக்கம். திருமணத் தொடக்கம் இனிக்கும். சிலரின் வாழ்வில் இந்த இனிப்பு முடிவு வரை இருக்கும். சிலரின் வாழ்க்கையில் இடையில் மனக் கசப்பு, வேதனை கொடுக்கும். மனமுறிவு மணமுறிவைத் தருகிறது. மனித வாழ்வின் இனிமையான பகுதி, ஒருத்தியை அல்லது ஒருவனை மீண்டும் தனிமை நரகத்தில் தள்ளுகிறது.
இன்று இந்தியாவில் மணவிலக்குத் துறையில் தமிழகம் தலைமை ஏற்றுள்ளதாகப் புள்ளி விவரம் எடுத்துரைக்கிறது. மணமுறிவு, விதவை நிலை என்ற முறையில் தில்லியின் அளவு 4.1 சதவீதம், மகாராஷ்டிரம் 7 சதவீதம், ஆந்திரம் 8.2 சதவீதம், தமிழ்நாடு 8.8. தமிழகத்தில் பலர் விவாகரத்துப் பெற்றுள்ளனர். இவர்களில் இளவயதினரே அதிகம் (23 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்டவர்கள்). வருங்காலக் கற்பனைக் கோட்டைகளைக் கானல் நீருக்கு விற்றவர்கள். இந்த வேதனைக்கும் துயரத்திற்கும் யார் காரணம்?
ஆண் என்பவன் ஆளப்பிறந்தவன் என்ற மனப்பான்மை சில குடும்பத் தலைவரின் உள்ளத்தில் ஆழப்பதிந்து கிடக்கிறது. அளவு மீறிய தன் உயர்வுத் தன்மையின் பார்வையில் மனைவி அடிமையாக எண்ணப்படுகிறாள். இது பழங்கால நிலை. இன்று காலம் மாறிவிட்டது. ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்ற நிலை பிறந்துள்ளது. ஆனால், கணவன் பழைமைப் போக்கிலேயே ஊறிக் கிடந்தால், மனைவியை தரக்குறைவாக நடத்தினால் பொறுத்துப் பார்க்கும் பெண் ஒரு நாள் திருமண வாழ்க்கைக் கூண்டிலிருந்து வெளியேறி விடுகிறாள்.
களங்கமிலாத மனைவி மீது களங்கம் ஏற்றினால், பூசலும் போரும் நாளும் நடத்தினால், விவாகரத்து என்ற மேகத்துள், மனைநிலா மறைந்து விடுகிறது. மாமனாரின் பணப் பெட்டி மேல் குறி வைத்துத் திருமண அம்பைப் பற்றிக் கொண்டவன், மனைவியை வேகமாக விரட்டத் தொடங்கினாலும் வாழ்க்கை வட்டத்தைவிட்டு, அவள் வெளியேறி விடுகிறாள். வெல்வேறு பெயர் கொண்டு திருமணச் சந்தையில் சில பெண்களைக் கைப்பற்றும் தனித் திறமை சிலருக்கு உண்டு. உண்மை வெளிவரும்போது, மனம் உடைந்த மனைவி, மணவிலக்கில் அடைக்கலம் புகுகிறாள். இப்படிப்பட்ட பல காரணங்கள் மணவிலக்கு அடிப்படை ஆகின்றன.
பெண்களுக்கு அணிகள் (நகைகள்) போடுவது அழகை அதிகப்படுத்தும் நோக்கத்திற்காக மட்டும் அல்ல, பொருளாதாரப் பின்னடைவு நேரும்போது கை கொடுப்பதற்காகவும் தான். முன்பு மனைவி வேலைக்குச் செல்லும் நிலை இல்லையே இன்று. பெண்ணும் வேலைக்குச் செல்கிறாள். அன்று பணத் தேவைக்கு கணவனிடம் கை ஏந்தும் நிலையில் இருந்தவள். இன்று கை நிறைய பணம் சம்பாதிக்கிறாள். இன்று, பொருளாதாரத்தைப் பொறுத்த மட்டில் அவள் சுதந்திரம் பெற்றுவிட்டாள். அவளால் தன் காலில் நிற்க முடியும். அவளுக்கு வெளி உலகம் தெரியும். ஆகவே, கணவனின் அதிகாரக் கை நீண்டால், அவள் இல்லறத்தை விட்டு வெளியேறுகிறாள்.
முன்பு சமுதாயம் பெண்ணைப் பயமுறுத்தி வைத்திருந்தது, அவளுக்கு உரிமை தரப்படவில்லை. ஆனால், அந்த நிலை இன்று இல்லை. பெண் மிகுந்த உரிமை பெற்று விட்டாள். தன் வருங்காலக் கணவனைத் தானே தேர்ந்தெடுப்பதற்கும் அவள் உரிமை மேற்கொண்டிருக்கிறாள்.
தன் உரிமையைத் துணைவன் பறித்தால், அவனை விட்டு அடியோடு விலகவும் அவன் உரிமை கொண்டிருக்கிறாள். ஆண் மகனைப் போலவே, பெண் மகளும் தன் வருங்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து கொள்கிறாள். வாழ்வைத் தொடங்குகிறாள். ஆனால், தன்னுடைய கற்பனைக் கோட்டையை ஆண் ஆதிக்கம் தகர்ப்பதாக உணரும்போது, மண உறவை அறுத்தெறிகிறாள். இக்காலத்தில் காதல் திருமணம் பரவலாக உள்ளது. காதலுக்கு கண் இல்லை. அதன் விளைவாக, எதிர்காலப் பார்வை குருடாகி விடுகிறது. முதலில் அன்புக்கே இடம் தந்த வாழ்வு மெல்ல மாறுகிறது. வெறுப்பு பிறக்கிறது. வளர்கிறது. பெண்ணிடம் உள்ள அளவுக்கு மீறிய தன்முனைப்பும் மணவிலக்குக்கு வழி காட்டுகிறது.
குடும்ப நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் மணவிலக்கு வழக்குகள் ஆண்டு தோறும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. சென்னையிலுள்ள குடும்ப நீதிமன்றத்தில் பதிவான வழக்குகள் 2000-ஆம் ஆண்டில் 1919, 2005-இல் 2723, 2009-இல் 5,265.
மணவிலக்கு பெற்றுவிட்டால் வாழ்க்கையில் பிடிப்பு அற்றுப்போகிறது. மணவிலக்கு பெற்றவர்களின் குழந்தைகளுடைய நெஞ்சங்களில் தாங்கள் ஆதரவற்றவர்கள் என்ற உணர்வு ஏற்படுகிறது.
இந்தப் பின் விளைவுகளை மணவிலக்கு கோருவோர் எண்ணிப் பார்க்க வேண்டும். கணவன் - மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். விட்டுத் தரும் மனப்பான்மை வேண்டும். வாழ்வாங்கு வாழ வேண்டும்.
முனைவர் மலையமான், சென்னை, கருத்துக்களம், தினமணி

Sunday, November 2, 2014

தரமணியில் புதுமணப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை


ஆலந்தூர்,

தரமணியில் புதுமணப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.


புதுமணப்பெண்

சென்னை தரமணி தந்தை பெரியார் நகர், கலைஞர் 1–வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிரேம்(வயது 27). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், பிரியா(22) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரியாவின் தங்கை திருமணம் நடைபெற்றது. ஆனால் இந்த திருமணத்துக்கு பிரேம் செல்லவில்லை என்று தெரிகிறது. இதனால் கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் மனம் உடைந்த பிரியா, வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் தரமணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

பிரியாவுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

நன்றி :- தினத்தந்தி

Saturday, November 1, 2014

உலக மசாலா: தனிமனிதனால் உருவான 2,087 அடி சுரங்கப்பாதை



உலக லண்டனில் உள்ள ஜார்ஜியன் ஹவுஸ் ஹோட்டல் 163 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கே ஹாரி பாட்டர் தீமில் புதிய அறைகளை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த அறைகளில் ஹாரி பாட்டர் திரைப்படங்களில் பார்க்கப்பட்ட பொருள்கள், படுக்கை, ட்ரங் பெட்டி, தேநீர் குவளை, திரைச் சீலைகள் என்று அச்சு அசலாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சுவர்களும் தரைகளும் கூட அப்படியே ஹாரி பாட்டர் அறை போலவே காட்சியளிக்கின்றன. 3 பேர் தங்கக்கூடிய இந்த அறையின் ஓர் இரவு வாடகை 15 ஆயிரம் ரூபாய். குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் ஹாரி பாட்டர் அறைகளை விரும்புவதால் வருமானம் கொட்டுவதாகச் சொல்கிறார்கள் உரிமையாளர்கள்.

ஹாரி பாட்டர் மவுசு குறையாதவரை, எந்த பிசினஸிலும் துணிச்சலாக இறங்கலாம்…
கலிஃபோர்னியாவில் உள்ள மோஹாவே பாலைவனத்தில் 2,087 அடிகள் நீளம் கொண்ட ஒரு சுரங்கப் பாதை தோண்டப்பட்டது. அது இன்று பிரபல சுற்றுலாத் தலமாக மாறியிருக்கிறது. இந்தச் சுரங்கத்தை வில்லியம் ஹென்றி ஸ்மித் தனி மனிதனாக உருவாக்கினார். 32 ஆண்டுகள் கைகளாலேயே கிரானைட் மலையை உடைத்து, அரை மைல் அளவுக்குச் சுரங்கத்தைத் தோண்டியிருக்கிறார்.

யாருக்காக, எதற்காக இந்தச் சுரங்கம் தோண்டப்படுகிறது என்பதை அவர் தெரிவிக்கவில்லை. குறுக்கு வழிக்காகவே சுரங்கம் தோண்டுவதாகத் தெரிவித்திருக்கிறார். பல முறை மோசமாகக் காயமடைந்தும் கூட அவர் சுரங்கம் தோண்டுவதை நிறுத்தவில்லை. காரணம் தெரியாவிட்டாலும் இந்தச் சுரங்கத்தைப் பற்றி ஏராளமான செய்திகள் உலாவுவதால், இன்று சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான சுரங்கமாக மாறிவிட்டது.

காரணம் தெரியாமல் உங்க உழைப்பு வீணாகுதே ஸ்மித்…

பிரபலமான விமான ஓட்டியும் சாகசப் பயணியுமான அமெலியா எர்ஹார்ட், விமானத்தில் உலகைச் சுற்றி வரும் முயற்சியில் காணாமல் போனார். 1937ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, அமெலியாவையும் விமானத்தையும் தேடும் முயற்சி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 1991ம் ஆண்டு நிகுமரோரோ பகுதியில் இருந்து ஓர் அலுமினியத் துண்டு கண்டெடுக்கப்பட்டது. அந்த அலுமினியத் துண்டை வைத்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அமெலியா ஓட்டிய விமானத்தின் ஒரு பகுதிதான் அந்த அலுமினியத் துண்டு என்பது இப்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுயமரியாதை கொண்டவராகவும், சாகசக்காரராகவும் என்ன ஓர் அற்புதமான மனுஷி அமெலியா!

ஹபர்ட் ரோசெரியா பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர். 1918ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகப் போரில், 21 வயது ஹபர்ட் இறந்து போனார். மகனின் மரணச் செய்தியால் உடைந்து போன பெற்றோர், அவருடைய அறையை அப்படியே பூட்டி வைத்துவிட்டனர். 1936ம் ஆண்டு வீட்டை விற்கும்போது, அந்த அறையை மட்டும் இன்னும் 500 ஆண்டுகளுக்கு இடிக்கக்கூடாது என்று உறுதி மொழி வாங்கிவிட்டனர். அதற்குப் பிறகு பலர் கைக்கு அந்த வீடு மாறிவிட்டது. ஆனால் ஒருவரும் அந்த அறையைத் திறக்கவோ, இடிக்கவோ முயற்சி செய்யவில்லை.

தற்போதைய வீட்டின் உரிமையாளர் அறையைத் திறந்தார். ஹபர்டின் புகைப்படங்கள், அவர் சேகரித்த கருவிகள், ராணுவ உடை, தொப்பி, கட்டில், மெத்தை, படிக்கும் மேஜை என்று நூறு வருடங்களுக்கு முன்பு எப்படி வைக்கப்பட்டதோ, அப்படியே இருந்திருக்கிறது அறை. ஆங்காங்கே சிலந்தி வலை, தூசி தவிர எந்த மாற்றமும் இல்லை. நூறு ஆண்டுகளாகத் திறக்கப்படாத இந்த அறையைத் திறந்து, செய்தியை வெளியிட்டிருக்கிறார் வீட்டின் உரிமையாளர்.

நூறு வருஷங்களுக்குப் பிறகு உங்களைப் பத்தி உலகமே பேச வச்சிட்டீங்களே ஹபர்ட்!


நன்றி :- தி இந்து