Saturday, October 31, 2015

தாவூத் - நிழல் உலகத்தின் குரூர நிஜம்


தாவூதின் முன்னாள் கூட்டாளி சோட்டா ராஜன் கைதுசெய்யப் பட்டிருக்கும் சூழலில் மீண்டும் அதிக வெளிச்சம் இந்த நிழலுலக மன்னன் மீது விழ ஆரம்பித்திருக்கிறது.

தாவூதின் வாழ்க்கையைத் துல்லியமான தரவுகளுடன் ‘தாவூத் இப்ராகிம்: டோங்கிரி டூ துபாய்’ என்ற தலைப்பில் ஒரு நூலாக எழுதியிருக்கிறார் எஸ். ஹுஸேன் ஸைதி. சுவாரஸ்யம் குன்றாமல் தமிழிலும் கார்த்திகா குமாரியின் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கிறது இந்த நூல். நூலின் முதல் அத்தியாயத்திலிருந்து சில பகுதிகள் இங்கே.

“2004-ம் ஆண்டு அமெரிக்காவின் கருவூலத்துறை அதிகாரிகளால் உலகளாவிய பயங்கரவாதியாக மாஃபியா கும்பலின் தலைவன் தாவூத் அறிவிக்கப்பட்டபோது, உலகெங்கும் பரவியுள்ள தாவூத்தின் அடியாட்கள் கொஞ்சமும் முகம் சுளிக்கவில்லை... ஏன் தெரியுமா? ‘நான் அமெரிக்க அதிபருக்குச் சமமானவன்’ என்ற தாவூதின் நம்பிக்கையை அந்த அறிவிப்பு உறுதிப்படுத்துவதாகவே அவர்கள் சொன்னார்கள்...

அது மட்டுமல்ல,...பல ஆண்டுகளாகத் தான் கட்டிய மாளிகைகளுக்கெல்லாம் ‘வெள்ளை மாளிகை’ என்று பெயர் வைப்பதுதான் தாவூதின் வழக்கம்… வெள்ளை மாளிகையில் வாழ்பவரைப் போல தாவூதும் பல்வேறு நாடுகளில் வசிக்கும் பலருடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தான். ஒரே ஒரு வித்தியாசம், அவர்கள் அனைவரும் நிழலுலகைச் சேர்ந்தவர்கள்.

இந்தியாவில் பல குற்றங்களுக்காகத் தேடப்படுகிறான் தாவூத். அதிலும் குறிப்பாக, 1993-ம் ஆண்டு நடந்த பம்பாய் தொடர் குண்டு வெடிப்பு. அதில் 257 பேர் உயிரிழந்தார்கள். 700 பேர் காயமடைந்தார்கள். சமீபத்தில் நடந்த (26/11) மும்பை குண்டு வெடிப்பில்கூட தாவூதின் பங்கு இருக்கிறது என்ற சந்தேகம் இருக்கிறது.

1986-ல் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்ட இந்தக் கடத்தல் மன்னன் பலமுறை இங்கு திரும்பி வருவதற்காக முயற்சி செய்திருக்கிறான். துபாயில் இருந்தபோதும் பாலிவுட் நடிகர்களை வரவழைத்து ஆட வைப்பது, அல்லது ஷார்ஜாவுக்கு வரும் கிரிக்கெட் வீரர்களை தன் விருப்பப்படி ஆட வைப்பது என அங்கே அவனுக்கான பிரத்யேக இந்தியாவை உருவாக்கியிருக்கிறான்.

1993 மார்ச் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன… தாவூத் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான். அப்போதுதான் இந்தியாவுடனான தனது தொப்புள்கொடி உறவு அறுந்துவிட்டது என்பது தாவூதுக்குப் புரிந்தது. 1992-க்குப் பிறகுதான் சர்வதேச அளவுக்கு உயர்ந்தான் தாவூத். அதற்குமுன் ரியல் எஸ்டேட், தங்கம், வெள்ளி, மின்னணுப் பொருள்கள், கஞ்சாக் கடத்தல் ஆகியவற்றில் மட்டும்தான் ஈடுபட்டிருந்தான்.

பாகிஸ்தான் தாவூதுக்கு புதிய பெயர், புதிய பாஸ்போர்ட், புதிய வாழ்க்கை என எல்லாம் தருவதற்குத் தயாராக இருந்தது. அதில் ஒரு சிக்கலும் இருந்தது. அங்கே தாவூத் அவர்களுடைய கையில் ஒரு பகடைக்காயாக இருக்கவேண்டும். ஆனால் அவன், தாவூத் இப்ராகிம். பாகிஸ்தானை தன்னுடைய பாட்டுக்கு ஏற்ப ஆடவைக்க முடியும் என்ற நம்பிக்கை தாவூதுக்கு இருந்தது. அதுவும் பணப்பையின் கயிறு தாவூதின் பிடியில் இருந்ததால், அதில் சிரமம் இருக்கும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. அதனால் தனக்குப் பிடித்த மும்பையை விட்டு, எல்லை தாண்டுவதென்று முடிவெடுத்தான்.

இப்படித்தான் இந்தியாவின் எதிரி தேசமாகக் கருதப்படும் பாகிஸ்தானுக்குக் குடிபோனான் தாவூத். கடந்த நாற்பது வருடங்களில் இந்தியா-பாகிஸ்தான் உறவை மாற்றியமைத்தவர்கள் இருவர். ஒருவன், தாவூத் இப்ராகிம். இன்னொருவர் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் ஜியா-உல்-ஹக். சலாஃபி இயக்கத்தை காஷ்மீருக்குள் புகுத்தி, அங்கிருந்த சூஃபி முஸ்லீம்களை தீவிரவாதத்தின் பக்கம் ஜியா-உல்-ஹக் திருப்பினார் என்றால், இந்த இருநாடுகளுக்கு இடையேயான உறவை திரும்பவும் சரிசெய்ய முடியாதபடிக்குக் கசக்க வைத்தான் தாவூத்.

அந்தச் சூழ்நிலை ஒரு நிலையான, தொடர் நகைச்சுவையாக மாறியது. ஒவ்வொரு முறை இந்தியா ஈனமான குரலில் தாவூதைக் கேட்கும்போதும், பாகிஸ்தான் ‘நேர் கொண்ட பார்வை’யுடன் அவன் தங்கள் மண்ணில் இருப்பதை மறுத்துவிடும். அதேநேரம் தேவைப்படும்போது, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தும் துருப்புச்சீட்டாகவும் இருக்கிறான் தாவூத். இந்தியா, பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சாவி தாவூத் என்பது இரு நாடுகளுக்குமே தெரிந்துதான் இருக்கிறது.

…அகதியாகவும், சட்டத்தை மீறியவனாகவும் இந்தியச் சட்டத்தின் பிடிக்கு வெளியே அவன் தங்கியிருப்பது இந்தியா வில் பலருக்கு வசதியாக இருக்கலாம். அவனுடைய பணத்தில் கட்டப்பட்ட பலரது ராஜ்யங்கள், அவன் இந்தியாவுக்குத் திரும்பி வந்தால் தரைமட்டமாகலாம். பழைய கதைகள் தோண்டி எடுக்கப்படலாம். தாவூத் பாகிஸ்தானிலேயே தங்க நேர்ந்ததற்கு மேற்படி நபர்களுடைய அதிகாரம்கூட காரணமாக இருக்கலாம். அதன் மூலம் தாவூதின் மரபு நிலைத்திருக்க அவர்கள் வழி செய்திருக்கலாம்.

அவனது டிரேட் மார்க் மீசையும், உதடுகளுக்கு இடையே பொருத்திய சிகாரும் தொடர்ச்சியாக பாலிவுட்டில் படமாக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் அவனைப் பற்றி பேச்சு தொடர்ந்துகொண்டே இருக்கும். தாவூத் தொடர்ந்து நழுவிக்கொண்டே இருப்பான். உண்மையான தாவூத் ஒரு புதிர்தான். அவனையும், அவனுடைய உலகத்தையும் புரிந்துகொள்ளச் செய்யும் ஒரு சிறு முயற்சியாக இந்தப் புத்தகம் இருக்கும்.''


நன்றி :- தி இந்து

Thursday, October 15, 2015

தியூப்ளே வீதி: -இரா.முருகன்



மேகத்தைத் துடைத்த வானம் நீலப் பரப்பு விரித்து விதானம் அமைத்த பெருவெளியில் நான் ஓடிக் கொண்டிருந்தேன்......

தியூப்ளே வீதி: அத்தியாயம்- 22 

செயிண்ட் லாரன் தெருவில் நுழைந்தபோது யாரோ மணி கேட்டார்கள்.

தியூப்ளே வீதி: அத்தியாயம்- 21 

பயபத்திரமாக மிக்சியைக் கழுவி, பட்டுத் துணியால் துடைத்து ஈரம் போக்குவது கண்ணில் பட்டது.

தியூப்ளே வீதி: அத்தியாயம் - 20 

நொளினிகாந்த் சட்டர்ஜி மோஷாய் உள்ளே இருந்து காகிதமும் பென்சிலுமாகத் திரும்பி வந்தார்.

தியூப்ளே வீதி:அத்தியாயம் - 19 

நான் சுவர்க்கத்தில் காலாற உலவியபடி தேவதைகளை நினைத்துக் கொண்டிருக்கும்போது இதைத் தொடங்கலாம்.

நன்றி :- தினமணி

Monday, October 12, 2015

அந்தக் குடும்பத்துக்குக் கொடுத்து வைக்கலை ஜெனிபர்!


அமெரிக்காவில் வசிக்கும் 27 வயது ஜெனிபர் ப்ரிகர் அக்ரோபடிக்ஸ் கலைஞர். ருமேனியாவில் ஒரு தம்பதிக்கு மூன்று மகள்களில் ஒருவராகப் பிறந்தவர். பிறக்கும்போதே அவருக்குக் கால்கள் இல்லை. அதனால் அவரது தந்தை குழந்தையை வளர்க்க விரும்பவில்லை. அமெரிக்க தம்பதிகள் ஜெனிபரைத் தத்தெடுத்துக்கொண்டனர். அக்ரோபடிக்ஸ், ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவற்றில் இயல்பிலேயே ஜெனிபருக்கு ஆர்வம் வந்தது. அதனால் அந்தக் கலைகளைக் கற்றுக்கொண்டார்.

‘‘என் பெற்றோர், என் குடும்பம், என் பள்ளி, என் பயிற்சியாளர் என்று யாருமே என் குறைபாட்டைச் சுட்டிக் காட்டியதில்லை. என் பெற்றோர் நான் குழந்தையாக இருந்தபோதே தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்று எனக்குப் புரிய வைத்துவிட்டனர். 11 வயதில் என் நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற டொமினிக் மொசியனு போலவே இருப்பதாகச் சொன்னார்கள். சற்று வளர்ந்த பிறகு எனக்கும் அவருக்குமான தொடர்பு பற்றி ஆராய்ந்தேன்.

அவரும் ருமேனியாவைச் சேர்ந்தவர். இருவருக்கும் ஜிம்னாஸ்டிக்ஸ் மீது ஆர்வம். என் பெற்றோரிடம் விசாரித்தபோது மொசியனு என்பதுதான் என்னைப் பெற்றவரின் பெயர் என்றனர். நான் சிறுவயதில் என் ரோல்மாடலாகக் கருதியவர் என் சகோதரி என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். நானும் டொமினிக்கும் சகோதரிகள் என்பதை உறுதி செய்துகொண்டேன்.

பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டேன். பேச முடியவில்லை. ஒரு கடிதமாக எழுதி, பத்திரிகையில் பிரசுரம் செய்தேன். என்னைப் பெற்ற அப்பா இப்பொழுது உயிருடன் இல்லை. அம்மாவையும் சகோதரிகளையும் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். டிஎன்ஏ பரிசோதனைக்கும் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தேன். ஆனால் செய்தி அறிந்த டொமினிக் ஆத்திரம் அடைந்துவிட்டார். பிறகு, எனக்கென்று மிக அருமையான பெற்றோரும் சகோதரர்களும் இருக்கிறார்கள். நான் என்னை முன்னேற்றிக்கொள்வதில் கவனத்தைத் திருப்பினேன். இன்று எல்லோரும் பாராட்டும் பெண்ணாக உயர்ந்திருக்கிறேன். பலருக்கு ரோல்மாடலாக இருக்கிறேன்’’ என்கிறார் ஜெனிபர்.

அந்தக் குடும்பத்துக்குக் கொடுத்து வைக்கலை ஜெனிபர்!

நன்றி :- தி இந்து

தாய், தந்தையரில் யாருடைய மரபணுக்களின் ஆதிக்கம் ......




இந்தப் படத்தில் இருப்பவர்கள் க்ளோன் செய்யப்பட்டவர்கள் அல்ல. இவற்றில் ஒரு குழந்தை இன்றைய குழந்தை. இன்னொரு குழந்தை சில வருடங்களுக்கு முன்பு அவர்களின் அம்மாவோ, அப்பாவோ குழந்தையாக இதே வயதில் இருந்தபோது எடுக்கப்பட்ட படங்கள்தான் இவை! பெண் குழந்தைகள் தங்கள் அப்பாவைப் போல அல்லாமல், தங்கள் அம்மாவை ஒத்திருக்கிறார்கள். அதேபோல ஆண் குழந்தைகள் அம்மாவைப் போல இல்லாமல், அப்பாவை ஒத்திருக்கின்றனர். தாய், தந்தையரில் யாருடைய மரபணுக்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறதோ அவர்களை ஒத்திருப்பார்கள் குழந்தைகள். ஆனால் இங்கே ஆண் குழந்தைகள் தங்கள் தந்தையையும் பெண் குழந்தைகள் தங்கள் தாயையும் அச்சு அசலாக ஒத்திருப்பது அபூர்வமான விஷயம் என்கிறார்கள்.

ரொம்ப ஆச்சரியமாக இருக்கே!

அதிக செலவு மிக்க ஒரு விளையாட்டு இப்பொழுது பரவி வருகிறது. இந்த விளையாட்டை இதய பலவீனமானவர்கள் விளையாடக்கூடாது. ஒரு பொருள் கீழே விழுந்தால் எடுக்க முடியாத இடத்தில் நின்றுகொள்ள வேண்டும். அதாவது கொட்டும் அருவி, ஓடும் ஆறு, மலை உச்சி, சாக்கடை, ரயில் பயணம், உயரமான கட்டிடம் போன்ற இடங்களில் நின்றுகொள்ள வேண்டும். விலை மதிப்பு மிக்க ஸ்மார்ட் போனின் ஒரு முனையை இரண்டு விரல்களால் பிடித்துக்கொள்ள வேண்டும். போனின் எடை, விரல்களின் நடுக்கம், விழுந்தால் திரும்பக் கிடைக்காது என்ற பயம் போன்றவற்றால் அட்ரினலின் சுரப்பி அதிகமாகச் சுரக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நாடித் துடிப்பு வேகமாகும். ஒருவேளை போன் விழுந்தால் மயக்கமே வந்துவிடலாம்.

இந்த விளையாட்டை ட்வெண்ட்டி ஒன் பைலட்ஸ் என்ற அமெரிக்கன் பாப் குழு கண்டறிந்திருக்கிறது. யுடியூப்பில் இதுவரை 3 லட்சம் பேர் விளையாட்டை விரும்பிப் பார்த்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் வேகமாக இந்த விளையாட்டு பரவி வருகிறது. ஒரு பெண் வெப்பக் காற்றுப் பலூனில் பறந்து கொண்டு இந்த விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார். இன்னொருவர் நயாகரா அருவியில் இதை விளையாடிப் பார்த்திருக்கிறார். விளையாடுபவர்களை விட அந்த விளையாட்டைப் பார்க்கும் பெற்றோருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துவிடுகிறது. இந்த விளையாட்டில் குறைந்த அளவிலேயே போன் கீழே விழுந்து விபத்து ஏற்படுவதாகச் சொல்கிறார்கள்.

போன் விழுந்தால் கூட பரவாயில்லை, நீங்க விழுந்துடாதீங்க…

டெக்ஸாசில் வசிக்கிறார் 12 வயது கேட்லின் தோர்ன்லி. மர்மமான நோயின் காரணமாக நாள் முழுவதும் தும்மிக்கொண்டே இருக்கிறார். 1 நிமிடத்துக்கு 20 தடவை என்று 1 நாளைக்கு 12 ஆயிரம் தடவைகள் தும்மிக்கொண்டிருக்கிறார். இந்த அசுரத்தனமான தும்மல்களால் குழந்தைகளுக்கே உரிய மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்காமல் பாதிக்கப்பட்டிருக்கிறார் கேட்லின். ’’4 வாரங்களுக்கு முன்பு பள்ளியில்தான் இந்தப் பிரச்சினை ஆரம்பித்தது. வரிசையாகத் தும்மல்கள் வந்துகொண்டே இருந்தன. ஏதாவது அலர்ஜியாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். உடனே வாயையும் கைகளையும் சுத்தம் செய்தேன். ஆனால் தும்மல் நிற்பதாக இல்லை. ஒருநாள் முழுவதும் தும்மிய பிறகு என் வயிற்றில் வலி வந்துவிட்டது. கால்கள் பலமிழந்துவிட்டன.

சாப்பிடக் கூட முடியவில்லை. பற்களும் வலிக்க ஆரம்பித்துவிட்டன. என்னால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. இதுவரை பல மருத்துவர்களைப் பார்த்துவிட்டோம். யாராலும் காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. என் பிரச்சினையைத் தீர்க்கவும் முடியவில்லை. எந்த மருத்துக்கும் இந்த நோய் கட்டுப்பட மாட்டேன் என்கிறது. அலர்ஜி, மன அழுத்தம், நரம்புத் தளர்ச்சி என்று காரணங்கள் சொன்னாலும் உண்மையான காரணம் யாருக்கும் தெரியவில்லை. பெனாண்ட்ரில் மருந்தை உட்கொண்டு என்னை மறந்து தூங்கும்போதுதான் தும்மல்கள் வருவதில்லை. ஆனால் அந்த நேரத்திலும் கனவில் தும்மல் வந்துவிடுகிறது. திடீரென்று தும்மல் வந்ததுபோலவே ஒருநாள் திடீரென்று மறைந்து போகும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்’’ என்கிறார் கேட்லின்.

நாலு தும்மலுக்கே நம்மால் தாங்க முடியாது… பாவம் குழந்தை…

நன்றி :- தி இந்து

5 முதல்வர்களுடன் நடித்த நகைச்சுவை அரசியின் வாழ்க்கை வரலாறு!

மிழ் திரையுலகினராலும், ரசிகர்களாலும் அன்போடு "ஆச்சி' என்று அழைக்கப்பட்ட நடிகை மனோரமா ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பெருமை பெற்றவர். மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். தமிழ் சினிமாவில் இவர் நடிக்காத கேரக்டேரே கிடையாது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1937, மே 26 ஆம் தேதி  காசி குலோகுடையார் - ராமாமிதம் தம்பதிக்கு  மகளாக மனோரமா பிறந்தார். இயற்பெயர் கோவிந்தம்மாள் . குடும்பத்தில் வறுமை சூழல்.இதனால் காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்கு வந்து சேர்ந்தது மனோரமா குடும்பம். யார் மகன்? என்ற நாடகத்தில் மனோரமா நடிக்கும் போது அவரது வயது வெறும் 12 .

நாடக இயக்குநர் திருவேங்கடம்தான்   இவருக்கு "மனோரமா' என பெயர் சூட்டினார்.  முன்னாள் முதல்வர் அண்ணாதுரை எழுதிய "வேலைக்காரி' உள்ளிட்ட சில நாடகங்களில் அவருடன் மனோரமா நடித்துள்ளார். கருணாநிதி எழுதிய "உதயசூரியன்' நாடகத்தில் கருணாநிதி கதாநாயகனாகவும் நடிக்க மனோரமா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து 1958ல் "மாலையிட்ட மங்கை' என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். கவிஞர் கண்ணதாசன்தான் இவரை சினிமாவுக்கு அழைத்து வந்தார். முதல் படமே காமெடி ரோலில் கலக்கினார். அந்த காலக்கட்டத்தில் நகைச்சுவை நடிகர் நாகேசுடன் மனோரமா தோன்றினார் தியேட்டரை சிரிப்பலையில் மூழ்கி கிடக்கும். 

தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர், ஆகியோருடனும், என். டி. ராமாராவுடன் தெலுங்கு படங்களில் என 5 முதல்வர்களுடன் நடித்திருக்கிறார். ஆயிரத்திற்கு மேற்பட்ட நாடகங்களில் மனோரமா நடித்துள்ளார்.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் சிங்களம் என ஆறு மொழி படங்களில் நடித்துள்ளார். எத்தனை பக்கம் வசனமென்றாலும் காட்சிக்கு ஏற்றவாறு பேசி அசத்தி விடும் தனித்திறமை மனோராமாவுக்கு உண்டு.

தில்லானா மோகனம்பாள் படத்தில்  சிவாஜி கணேசன், பத்மினி ஆகியோருடன் மனோரமா நடித்திருப்பார். இப்படத்தில் "ஜில் ஜில் ரமாமணி' என்ற கேரக்டர் அந்த காலத்திலேயே மிக பிரபலமாக இருந்தது. 

"கண் திறந்தது' படக் கதாநாயகன் எஸ்.எம்.ராமாநாதனை  மனோராமா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார். கடைசியாக மனோரமா நடித்த படம் பொன்னர் சங்கர் ஆகும்.100 க்கு மேற்பட்ட பின்னணி பாடல்களையும் மனோரமா பாடியுள்ளார். 
 
1989ம் ஆண்டு "புதிய பாதை' என்ற படத்தில் நடித்தற்காக, "சிறந்த துணை நடிகைக்கான' தேசிய விருது மனோரமாவுக்கு வழங்கப்பட்டது. 2002ம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான "பத்ம ஸ்ரீ' விருதை மனோரமா பெற்றார்.

இவரது நடிப்பை அங்கீகரிக்கும் வகையில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர்' பட்டம் வழங்கியது. ஆயிரம் படத்திற்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் புத்தகத்திலும் நடிகை மனோரமா இடம் பெற்றுள்ளார்.
vikatan.com

Tuesday, October 6, 2015

காதலை மற... கற்றதை நினை!


எனது வயது 27. நான் எனது உறவுக்காரப் பெண்ணை கடந்த‌ 7 மாதமாக காதலித்துவருகிறேன். பள்ளி, கல்லூரியில் பெண்களுடன் அதிகம் பேசியதில்லை. அவள் ஒரு நாள் ஃபேஸ்புக்கில் எனக்கு செய்தி அனுப்பியிருந்தாள். அன்றிலிருந்து நாங்கள் இருவரும் தொலைபேசியிலும் பேசிவந்தோம்.

இந்த நிலையில் ஒரு நாள் அவளிடம் என் காதலைச் சொன்னேன். ஆனால் அவளோ 'எனது பெற்றோர் சொல்படிதான் நடப்பேன்' என்கிறாள். இதுவரை அவள் என்னை காதலிப்பதாகக் கூறியதில்லை. நான்தான் ‘இவளே என் மனைவி' என்று நிறைய கனவுகளுடன் ஆழமாக அவளைக் காதலிக்கிறேன்.

இப்போது அவள் என்னிடம் சரியாக முகம் கொடுத்துப் பேசுவதில்லை. ஆனால் நானோ அவளிடம் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது வலியச் சென்று பேசுகிறேன். கடந்த சில நாட்களாக எங்கள் இருவருக்கும் இடையில் அதிகம் சண்டை வருகிறது. இவள் எனக்கு ஏற்றவள் இல்லையோ என தோன்றுகிறது. இருந்தாலும் அவளை மறக்க முடியாமல் திணறுகிறேன்.

அவள் அதீதமாக‌ப் பெற்றோருக்குப் பயப்படுகிறாளோ என்று நினைக்கிறேன். நான் அவளிடம் காட்டும் அன்பில் சிறிதளவுகூட அவள் என் மீது காட்டியது இல்லை. இதையெல்லாம் நினைத்து நினைத்து என்னால் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியவில்லை. நான் என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கு இதைப் பற்றியெல்லாம் யோசிக்கும்போது தலைவலி வருகிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறேனோ என்று அஞ்சுகிறேன். இதிலிருந்து மீள வழி சொல்லுங்கள். ப்ளீஸ்...

ஒரு பெண் தானாக ஃபேஸ்புக்கில் பேச ஆரம்பித்ததை மட்டும் வைத்து காதலிக்கிறார் என்ற முடிவுக்கு வந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்! ‘விண்ணைத் தாண்டி வருவாயா' நாயகி ஜெஸ்ஸி மாதிரி நடந்துகொள்கிறாரே உங்கள் காதலி?!

உங்களுக்கு ஏற்றவள் இல்லை என்று தோன்ற ஆரம்பித்த பின் சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை. அடுத்து என்ன என்று குழப்பமாக இருக்கிறது இப்போது! அவரது காதல் ஆழமாக இருந்திருந்தால் பயத்தையும் மீறி பெற்றோரிடம் போராடியிருப்பாரே!

உங்களையும் காதலையும் பெற்றோருக்காகத் தியாகம் செய்யத் தயாராக இருப்பவருக்காக உங்களை ஏன் வருத்திக்கொள்கிறீர்கள்? காதலி உங்கள் வாழ்வில் வருவதற்கு முன்பு நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையா? அவரால் வந்த சந்தோஷம் மட்டுமே காணாமல் போயிருக்கிறது. அப்போதிருந்த மகிழ்ச்சியை எப்படித் திரும்பக் கொண்டுவருவது என்று பாருங்கள்.

ஆரம்ப காலக் காதல், போதை மாதிரி கிறங்க வைக்கும். சில காலத்தில் போதை இறங்கிய பின் துணைவரிடம் உள்ள குறைகள் தெரிய ஆரம்பிக்கும். அதனால் கோபம், சண்டை எல்லாம் அதிகமாகிவிடும். உங்கள் நல்லகாலம், இப்போதே புரிந்துவிட்ட

பேசினால் அவரை மறக்க முடியாது. கசப்பான அனுவங்களை அசைபோடுவதால் மேலும் மன அழுத்தமும், சோர்வும் அதிகரிக்கும். அவற்றை நினைக்காதீர்கள். ஆனால் அவற்றில் கற்றுக்கொண்ட பாடத்தை மறக்காதீர்கள். ஆருயிர் காதலிக்கு எது வேண்டுமோ அதைச் செய்ய விடுங்கள். அவரை மறக்க முடியும் என்று நினைக்க ஆரம்பியுங்கள்.

தினசரி வாழ்வில் காலை முதல் இரவு வரை உங்களை ‘பிஸி'யாக வைத்துக்கொள்ளுங்கள். அவரைப் பற்றி நினைக்கக்கூட நேரமில்லாதபடிக்கு, வேலை, யோகா, தியானம், நுண்கலைப் பயிற்சி, நீச்சல், விளையாட்டு போன்றவற்றைக் கற்றுக்கொண்டு உங்கள் கவனத்தை அவற்றில் செலுத்துங்கள். மனதின் வெறுமையைப் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் நிரப்புங்கள்!

Image result for உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்


என் வயது 22. 2010-ம் வருடம் தனியார் கல்லூரி ஒன்றில் சேர்ந்தேன். தமிழ் வழிக் கல்வி பயின்றதால் தொடக்கத்தில் சற்று பதற்றத்துடன் இருப்பேன். வகுப்பில் பெண்களுடன் பேச மிகவும் தயங்குவேன். அவர்கள் இருக்கும் பக்கம் கூடத் திரும்ப மாட்டேன். கொஞ்சம் தாழ்வு மனப்பான்மையும் இருந்தது.

பின், எனக்குக் கிடைத்த நண்பர்கள் இருவர் என்னை அதிலிருந்து ஓரளவு வெளியே கொண்டுவந்தனர். இரண்டாம் ஆண்டு படிக்கும்போது என் வகுப்புப் பெண் ஒருவரைக் காதலிக்கத் தொடங்கினேன். என் நண்பர்கள் மூலம் இந்த விஷயம் அவளுக்குத் தெரிந்தது.
பின்னர் என் நண்பர்களிடம், 'என் மனதில் அப்படியான எண்ணம் எதுவும் இல்லை' என்று கோபமாகக் கூறிவிட்டாள். கல்லூரி முடியும் கடைசி நாள் அவளிடம் என் காதலைச் சொல்லலாம் என முடிவெடுத்தேன். ஆனால், என்னால் அது முடியவில்லை.

அவள் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் இப்போது வேலை செய்கிறாள். நான், இப்போது மேற்படிப்பு இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறேன்.

இடைப்பட்ட காலத்தில் நாங்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது அவள் அஞ்சல் வழியில் படித்துக்கொண்டிருந்ததால் அவளுக்குச் சில புத்தகங்கள் தேவைப்பட்டது. என்னிடமிருந்த சில புத்தகங்களைக் கொடுத்தேன். அதற்குப் பிறகு நாங்கள் இருவரும் நீண்ட நேரம் போனில் பேசிக்கொள்ளத் தொடங்கினோம். போன் பேச்சுகள் எனது காதலை மேலும் அதிகபடுத்தின. ஆனால், அதே அளவு பயமும் இருந்தது. எங்கே காதலைச் சொன்னால் நம்மிடம் இருந்து பிரிந்து சென்றுவிடுவாளோ, பிறகு நம்மால் பேசக்கூட இயலாதோ என பயந்தேன்.

இருந்தாலும் அவள் பிறந்த நாளில் அவளிடம் என் காதலை தெரிவித்தேன். அவளோ, ‘உனக்கு என்னைவிட நல்ல பெண் கிடைப்பாள். எங்கள் வீடு பற்றி உனக்குத் தெரியாது. நான் என் தாய் தந்தை பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் மணந்துகொள்வேன்' என்றாள்.

நான் ‘எனக்கு இரண்டு வருடம் அவகாசம் கொடு. உன் வீட்டில் வந்து பேசுகிறேன்' என்றேன். அவள் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். பதில் ஏதும் சொல்லவில்லை.
அவளின் அப்பா கண்டிப்பானவர். அவள் தன் தாய் தந்தையர் மீது உயிரையே வைத்திருக்கிறாள். இதனால் அவள் மீதான மரியாதை மேலும் அதிகரித்தது.
அவளை மறக்க இயலாமல் மனதுக்குக் கஷ்டமாக உள்ளது. தற்போது மேற்படிப்பை முடிக்க உள்ளேன். ஒரு நல்ல பணியில் சேர்ந்த பின்பு மீண்டும் அவளிடம் பேசலாம் என தோன்றுகிறது. இருந்தாலும் ஒருபுறம் ‘நான் மட்டும்தான் காதலித்தேனோ, அவள் என்னை காதலிக்கவில்லயோ? என்னை ஏற்றுக்கொள்ள மாட்டாளோ?' என்று குழப்பமாக உள்ளது. உங்கள் ஆலோசனை வேண்டுகிறேன்.

காதல் கிரிக்கெட்டில் விக்கெட் விழுந்து, டக் அவுட் ஆயாச்சு. ஆனால் விளையாட்டு இன்னும் முடியவில்லையே! அதற்குள் ஏன் மறப்பதைப் பற்றி நினைக்கிறீர்கள்? உங்களைப் பிடிக்கவில்லை என்று அவர் சொல்லவில்லையே! காதலுக்குத் திரை போட்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.
இனி அவரிடம் பேச வேண்டாம். காதலில் வெற்றியா, தோல்வியா என்று தெரியாத இந்த நேரத்தில் இருவரும் மேலும் ஆசையை வளர்த்துக்கொள்வது நல்லதல்ல. உங்கள் கவனம் படிப்பிலும் வேலையிலும் இருக்க வேண்டும்.

வேலையில் அமர்ந்த பின் அவரது பெற்றோரிடம் முறையாகப் பெண் கேளுங்கள். சாமர்த்தியமாகக் காயை நகர்த்துங்கள். யார் மூலம் அவர்களை நெருங்கினால் நடக்கக்கூடுமோ, அவரை அணுகுங்கள். நடந்தால் காதலுக்கு வெற்றி. பெற்றோரை மீறிக் காதலி வர சம்மதித்தாலும் வெற்றியே! ஆனால் வர மாட்டார் என்றுதான் தோன்றுகிறது.

வாழ்வில் வெற்றி, தோல்வி இரண்டையும் எதிர்கொள்ளப் பழக வேண்டும். முக்கியமாக, காதல் இருவர் சம்பந்தப்பட்டது. ஆனால் திருமணம் இரண்டு குடும்பங்கள் சம்பந்தப்பட்டது. அதனால் காதலின் எதிர்காலம் என்ன என்று காதலர்கள் குறிசொல்ல இயலாது. காதல் தானாக அரும்புவது. பெற்றொரின் சம்மதம் கேட்டா காதலிக்க முடியும்? வேறு பல சூழ்நிலைகளைப் பொறுத்து காதல் வெல்வதும் தோற்பதும் இருக்கையில், இரண்டுக்கும் தயாராக இருக்க வேண்டியது அவசியம்.
இப்போதே ஏன் தோற்றுவிட்டதாக முடிவு செய்துவிட்டீர்கள்? பின்னால் தோற்றாலும், ‘என்னால் முடிந்தவரை முயன்றுவிட்டேன்' என்கிற திருப்தியாவது இருக்கும். அவரிடம் பேசாமல் இருக்கும் காலகட்டத்தில் அவருக்கும் நீங்கள் வேண்டுமா, இல்லையா என்பதில் ஒரு தெளிவு பிறக்கும். நாளை என்ன நடக்கும் என்கிற கவலையில் இன்றைய தினத்தைக் கோட்டைவிடாதீர்கள். பிரச்சினை வரும்போது கவலைப்படலாமே!

Image result for உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். 

உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். 

முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 

124, வாலாஜா சாலை, சென்னை-600 002. 

மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

Sunday, October 4, 2015

விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் சோதனை: கணக்கில் காட்டாத ரூ.100 கோடி சொத்துகள் சிக்கின

நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட 10 பேரின் வீடுகளில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் கணக்கில் காட்டாத ரூ. 100 கோடி சொத்துகள் சிக்கியது தெரிய வந்துள்ளது.


 மேலும், அவர்களது வீட்டில் இருந்த கணக்கில் வராத ரூ. 2 கோடி மதிப்புள்ள தங்க நகை, ரூ.2 கோடி ரொக்கம் ஆகியவற்றை வருமான வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்த விவரம்: 

 பெரும் பொருள்செலவில் தயாரிக்கப்பட்ட நடிகர் விஜய் நடித்த "புலி' திரைப்படத்துக்கு முறையாக வருமான வரி செலுத்தப்படவில்லை என வருமான வரித் துறைக்கு புகார்கள் வந்தன. அதே போல நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, "புலி' பட இயக்குநர் சிம்புதேவன், தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வக்குமார், சிபு தமயந்த், பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, அன்புச்செழியன், நிதி நிறுவன உரிமையாளர் ரமேஷ், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட 10 பேர் வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித் துறைக்கு புகார்கள் வந்தன.

 இந்தப் புகார்களின் அடிப்படையில் வருமானவரித் துறையினர் சென்னை, மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத் ஆகிய ஊர்களில் 35 இடங்களில் ஒரே நேரத்தில் புதன்கிழமை காலை திடீர் சோதனையைத் தொடங்கினர். இதில் புகார் கூறப்பட்ட அனைவரது வீடுகள், அலுவலகங்கள், ஓய்வு இல்லங்கள் ஆகியவற்றில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை தமிழகம், கேரளம், தெலங்கானா என 3 மாநிலங்களில் 35 இடங்களில் 400 வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதன்கிழமை காலை தொடங்கிய சோதனை வியாழக்கிழமை இரவையும் தாண்டி நீடித்தது.

 கணக்கில் காட்டாத ரூ.100 கோடி: இந்தச் சோதனையில் நடைபெற்ற 10 பேரின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் கணக்கில் வராத ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள், ரூ.2 கோடி பணம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வருமான வரித் துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.

 அதேபோல 10 பேர் வீடுகளிலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பத்திரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் 10 பேரும் கணக்கில் காட்டாமல் ரூ.100 கோடி சொத்துகளை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்தப் பண பரிவர்த்தனையை உறுதி செய்துள்ள வருமான வரித் துறை அதிகாரிகள், அதற்கு வருமான வரியாக ரூ.30 கோடி விதித்திருப்பதாகவும், அதற்கு அபராதக் கட்டணம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 ஆனால், இந்தச் சோதனையில் ஒவ்வொருவர் வீட்டிலும், அலுவலகத்திலும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், ரொக்கம் பற்றிய தகவல்களை தெரிவிக்க வருமான வரித் துறையினர் மறுத்துவிட்டனர்.

நன்றி :-தினமணி

ரூ.3,770 கோடி கருப்புப் பணம் ! 638 பேர் ஒப்புக் கொண்டதாக மத்திய அரசு தகவல் !

வெளிநாடுகளில் ரூ.3,770 கோடி கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக 638 பேர் வருமான வரித் துறையிடம் ஒப்புக் கொண்டனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 கருப்புப் பணத்தை மீட்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமாக, சட்டவிரோதமாக வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அமலுக்கு வந்தது.

 இந்நிலையில், குறிப்பிட்ட காலத்துக்குள் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் தாமாக முன்வந்து தகவல்களைத் தெரிவித்தால், சிறைத் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அவ்வாறு தகவல் அளிப்பவர்களிடமிருந்து 30 சதவீதம் வருமான வரி, 30 சதவீதம் அபராதம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 அதற்கான காலக்கெடு ஜூலை 1 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டது. கருப்புப் பணம் குறித்த தகவல்களை பகிரங்கரமாக தெரியப்படுத்துவதற்கு புதன்கிழமை இறுதி நாள் என்பதால், அன்றைய தினம் அதிக எண்ணிக்கையிலானோர், தங்களது தகவல்களை வருமான வரித் துறைக்குத் தெரியப்படுத்தியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இதுகுறித்து நிதித் துறை அமைச்சகம் வியாழக்கிழமû வெளியிட்ட செய்தி: வெளிநாடுகளில் சொத்துகள், கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்கள் 638 பேர், தங்களது தகவல்களை வெளியிட்டனர். அவர்கள் ரூ.3,770 கோடி பணத்தை சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. 

 சம்பந்தப்பட்ட நபர்கள், தாங்கள் பதுக்கி வைத்த தொகையில் 30 சதவீதத்தை அபராதமாகவும், 30 சதவீதத்தை வருமான வரியாகவும் டிசம்பருக்குள் செலுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் அளித்த விவரங்களின் அடிப்படையில், 638 பேரிடம் உள்ள கருப்புப் பணத்தின் மதிப்பு ரூ.3,770 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. 

 துல்லியமாகக் கணக்கிடும்போது அதில் சிறிது மாற்றங்கள் இருக்க வாய்ப்புண்டு என மத்திய அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இதுகுறித்து மத்திய வருவாய்த் துறைச் செயலர் ஹேஷ்முக் அதியா தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ளவர்கள், தங்களது விவரங்களை பகிரங்கமாக வெளியிட 90 நாள்கள் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் தாமாக முன்வந்து தகவல்களைத் தெரிவித்தனர்.

 தற்போது, கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளது தொடர்பான தகவல்களை வெளியிடாதவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் பணிகளைத் தொடங்க உள்ளது என்றார் அவர். 

 காங்கிரஸ் விமர்சனம்

 மத்திய அரசின் கருப்புப் பண மீட்பு நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை 100 நாள்களுக்குள் மீட்பதாக தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி என்னவாயிற்று? என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

 இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, தில்லியில் ஊடகங்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

 வெளிநாடுகளில் ரூ.80 லட்சம் கோடி கருப்புப் பணத்தை இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ளதாகத் தெரிவித்த மோடி, அதை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் செலுத்துவதாக வாக்குறுதி அளித்தார்.

 அவர் பிரதமராகப் பொறுப்பேற்று 16 மாதங்கள் கடந்துள்ளன. கருப்புப் பண மீட்பு சட்டத் திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், அவற்றால் நமக்குக் கிடைத்தது என்ன? கருப்புப் பண மீட்பு நடவடிக்கையில், ரூ. 3,770 கோடி இருப்பது மட்டுமே தற்போது தெரியவந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது என்றார் ரண்தீப் சுர்ஜேவாலா.
நன்றி :- தினமணீ

Saturday, October 3, 2015

சில ஆயிரம் செலவில், லட்சம் லிட்டர் தண்ணீர் -- பாமயன்


உலகுக்கு உணவு தரும் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், எல்லோருக்குமே நெருக்கடியாக இருக்கக்கூடிய இயற்கை வளம் தண்ணீர். குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது நமக்குத் தெரியும். கோடையில் தென்னையைக் காப்பாற்ற தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பாசனம் செய்யும் உழவர்கள் நம்மூரில் இருப்பது அதைவிடக் கொடுமை. இப்படி நீரின் தேவையும் அழுத்தமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது.
அனைத்துப் பொருட்களைவிடவும் நீர் விலைமதிப்பற்றது. ஏனென்றால், நீரை விளைவிக்க முடியாது. அதனால்தான் நமது முன்னோர் `நீரின்றி அமையாது உலகு’ என்று கூறிவைத்தார்கள். அளவற்ற அன்பை செலுத்துவதுபோல, தனது பிள்ளைகளாகிய உயிரினங்களுக்கு நீரை இயற்கை அள்ளிக் கொடுத்துள்ளது. உலகில் மனித குலம் மட்டுமே, தண்ணீரை மாசுபடுத்தி அழிக்கும் பணியைச் செய்கிறது. குறிப்பாக, பேராசை பிடித்தாட்டும் மனிதர்களால்தான் அது நடக்கிறது. காட்டில் வாழும் பழங்குடிகளும், கடலருகே மீன் பிடித்து வாழும் மீனவர்களும், ஏழை உழவர்களும் இந்தக் கொடுமையைச் செய்வதில்லை.

குறைந்த செலவு

இந்தப் பின்னணியில் மழையால் கிடைக்கும் நீரை, முறையாகச் சேமித்தாலே நமது தேவையில் பெரும் பகுதியை நிறைவு செய்துகொள்ளலாம். அந்த முயற்சியில் மிகக் குறைந்த செலவில், மழைநீர் அறுவடை செய்யும் பணியை செய்துவருகிறார் உடுமலைப்பேட்டை சிவக்குமார்.
தன்னுடைய பண்ணையில் இவர் இதைச் செய்துள்ளதோடு மற்ற உழவர்களுக்கும் இந்த ஏற்பாட்டை செய்துகொடுத்துவருகிறார். இவர் ஓர் இயற்கைவழி உழவர்.
இவருடைய ஒருங்கிணைந்த பண்ணையில் தென்னை, பட்டுப்புழு வளர்ப்பு, கோழி வளர்ப்பு ஆகியவற்றுடன் காய்கறிச் சாகுபடியும் நடக்கிறது. இவரது கோழி வளர்ப்பு மாதிரியும் அனைவரும் பின்பற்ற வேண்டிய முன்னுதாரணமே. மிகக் குறைந்த செலவில் கோழி வளர்க்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி உள்ளார்.

நீர் சேமிப்பைப் பொறுத்தவரையில் ஏறத்தாழ ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் செலவில், நீர் சேமிப்பு அமைப்பை இவர் உருவாக்கிவிடுகிறார். இந்த முறையின் அடிப்படை அம்சம் ஆழ்துளைக் கிணறுகளிலும், சாதாரண திறந்தவெளிக் கிணறுகளிலும் நேரடியாக நீரைச் செலுத்துவதுதான்.

எப்படிச் செய்வது?

மழைக் காலத்தில் நம் வயலுக்கு அருகில் உள்ள ஓடை அல்லது குளங்களில் தண்ணீர் வந்து சேரும். அப்போது ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் நீர் அங்கு நிற்காமல், பயன்படாமல் வெளியேறிவிடும். அந்த நீரை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இவருடைய கோட்பாடு. அந்த அடிப்படையில் ஒரு குளத்தில் இருந்தோ, ஓடையில் இருந்தோ அல்லது புதிதாக ஒரு பண்ணைக் குட்டையை அமைத்தோ, நீர் வந்து சேரும் இடத்தை இவர் தேர்வு செய்கிறார். அந்த இடத்திலிருந்து ஏறத்தாழ ஐந்து அடி ஆழத்துக்கு வாய்க்கால் அமைக்கிறார். அந்த வாய்க்கால் ஆழ்துளைக் கிணற்றை நோக்கி அமைக்கப்படுகிறது.

அதன் பின்னர் வாய்க்கால் வரும் வழியில் வடிகட்டும் அமைப்பு ஒன்று உருவாக்கப்படுகிறது. இது மிகவும் இன்றியமையாத ஒரு செயல்பாடு. இதற்கும் செலவு குறைவான முறையையே இவர் கையாளுகிறார். இந்த வடிகட்டும் அமைப்பைப் பலரும் மிக அதிக செலவு செய்து உருவாக்குகின்றனர், அது தேவையற்றது.

வடிகட்டும் அமைப்பை உருவாக்க பிளாஸ்டிக் பீப்பாய் பயன்படுத்தப்படுகிறது. இருநூறு லிட்டர் கொள்ளளவு உள்ள பீப்பாய் பரவலாக எல்லா இடங்களிலும் கிடைக்கிறது, அது போதும். இந்தக் கலனில் ஆறு மில்லி மீட்டர் அளவுகொண்ட, நெருக்கமான துளைகள் இடப்படுகின்றன. அதன் பின்னர் அந்தப் பீப்பாயின் நடுவில் ஆறு விரற்கடை (இஞ்ச்) விட்டமுள்ள பி.வி.சி. குழாய் பொருத்தப்படுகிறது. அந்தக் குழாயில் மிகக் சிறிய துளைகள் இடப்படும்.
நடுவில் பொருத்தப்படும் குழாயைச் சுற்றி, ஒரு சல்லடைத் துணி நன்கு கட்டப்படுகிறது. அதேபோல பீப்பாயின் உட்பகுதியில், அதாவது, சுவற்றுப் பகுதியிலும் சல்லடைத் துணி பொருத்தப்படுகிறது. இதன் இடைவெளியில் கசடு, கழிவு அகற்றப்பட்ட குறுமணல் நிரப்பப்படுகிறது. இது மணல் வடிகட்டியாகச் செயல்படும்.

இந்த அமைப்பை ஒழுங்கு செய்த பின்னர், குளத்திலிருந்து ஐந்தடி ஆழத்தில் உள்ள வாய்க்கால் வழியாகக் கொண்டுவரப்படும் பி.வி.சி. குழாயுடன் இணைக்கப்படும். இப்படியாகக் குளத்திலிருந்து நேரடியாக வடிகட்டும் அமைப்புக்கு நீர் வந்துவிடுகிறது.

புவியீர்ப்பு விசை

இதன் பின்னர் வடிகட்டியில் இருந்து நீர், கிணற்றுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்காக பீப்பாயின் நடுவில் உள்ள குழாயுடன் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. அதாவது, மணல் வடிகட்டியில் நீர் தூய்மைப்படுத்தப்பட்டு, குழாய் வழியாக இறங்கி, கிணற்றுக்கு வந்து சேர்கிறது. இதனால் எந்தவித கசடும், மண்ணும் தண்ணீரில் கலந்திருப்பதில்லை. இந்த வடிகட்டி அமைப்பு பல ஆண்டுகளுக்கு வேலை செய்கிறது. இந்த முறையில் எந்த வகையிலும் மின்சாரமோ, ஆற்றலோ தேவையில்லை. நீரை ஏற்றவோ, தள்ள வேண்டிய தேவையோ கிடையாது. முற்றிலும் புவியீர்ப்பு விசையை அடிப்படையாகக் கொண்டு இது செயல்படுகிறது.

ஆண்டுக்கு ஒரு லட்சம் லிட்டர்

இந்த அமைப்பின் மூலம் முதல் பருவ மழையிலேயே ஆழ்துளைக் கிணறுகள் போதிய அளவு நீரைப் பெற்றுவிடுகின்றன. அதுமட்டுமல்ல, நீர் வறண்டு உயிர்விட்ட கிணறுகள்கூட, இந்த அமைப்பு மூலம் உயிர்ப்பிக்கப்பட்டு நீர் மட்டம் உயர்கிறது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட கிணறுகளுக்கு அருகிலுள்ள மற்ற கிணறுகளிலும் நீர் மட்டம் உயர்கிறது. இப்படியாக மிகக் குறைந்த செலவில் ஓராண்டிலேயே சில லட்சம் லிட்டர் நீரைப் பெறும் உத்தியை, இவர் உருவாக்கி இருக்கிறார். தேவைப்படுபவர்களுக்கு இந்த ஏற்பாட்டை அவர் செய்தும் கொடுக்கிறார்.

(அடுத்த வாரம்: புதுமை படைக்கும் பெண் விவசாயி)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: adisilmail@gmail.com

விவசாயி சிவக்குமார் தொடர்புக்கு: 7598378583

நன்றி :- தி இந்து

ரத்தக் கொழுப்புப் பரிசோதனைகள் - டாக்டர் கு.கணேசன்

கொழுப்பு என்றாலே கெட்டது என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கொழுப்பில் நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு. கொலஸ்ட்ரால், கொழுப்புப் புரதம், டிரைகிளிசெரைட்ஸ் எனக் கொழுப்பில் பலவிதம் உண்டு.

கொலஸ்ட்ரால்

'கொலஸ்ட்ரால்' மாமிச உணவிலிருந்து நேரடியாகக் கிடைக்கிற கொழுப்பு. உடலில் கல்லீரலும் இதைத் தயாரிக்கிறது. தேவைக்கு அதிகமாக மாவுச்சத்து உடலில் சேரும்போது, அதை கொலஸ்ட்ராலாகக் கல்லீரல் மாற்றிவிடுகிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமானால் இதயத்துக்கு ஆபத்து.

கொழுப்புப் புரதம்

உணவிலிருந்து பெறப்படும் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் கரையாது; உடலில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இதனால் தனியாகச் செல்ல முடியாது. எனவே, இது புரத மூலக்கூறுகளுடன் இணைந்து உடலின் பல பகுதிகளுக்குப் பயணிக்கிறது. இதற்குக் ‘கொழுப்புப் புரதம்' (Lipo protein) என்று பெயர். இது மூன்று வகைப்படும்:

1. எல்.டி.எல். ( Low Density Lipo protein - LDL)
2. ஹெச்.டி.எல். (High Density Lipo protein - HDL)
3. வி.எல்.டி.எல். (Very Low Density Lipo protein - VLDL)

முக்கியத்துவம் என்ன?

கொழுப்புப் புரதங்களில், எல்.டி.எல்.லும் வி.எல்.டி.எல்லும் கெட்டவை. இவை கல்லீரலிலிருந்து இதயத்துக்குக் கொழுப்பை எடுத்துச் சென்று, இதயத் தமனிக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்புக்குப் பாதை போடும். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயை அடைத்துப் பக்கவாதம் வருவதற்கு ஏற்பாடு செய்யும். ஆகவே, இவற்றைக் \கெட்ட கொழுப்பு' (Bad Cholesterol) என்கிறோம்.
ஆனால் ஹெச்.டி.எல். இதயத்துக்கு நன்மை செய்கிறது. இதயத்திலிருந்து கொழுப்பை விடுவித்து, கல்லீரலில் வைத்து அதை கரைத்துவிடுகிறது. இதன்மூலம் மாரடைப்பு / பக்கவாதம் வராமல் பார்த்துக்கொள்கிறது. எனவே, இதற்கு ‘நல்ல கொழுப்பு' (Good Cholesterol) என்று பெயர்.

டிரைகிளிசெரைட்ஸ்

'டிரைகிளிசெரைட்ஸ்' என்பது கொழுப்பு அமிலங்கள் மற்றும் கிளிசெரால் கலந்த கொழுப்பு. ரத்தக் குழாய்களைத் தடிக்க வைத்து, ரத்த ஓட்டத்தை நிறுத்தக்கூடிய தன்மை இதற்கு உண்டு. மேலும் இது கொலஸ்ட்ரால், பாஸ்போ லிப்பிட்ஸ், புரதம் ஆகியவற்றுடன் இணைந்து வி.எல்.டி.எல். கொழுப்பை உற்பத்தி செய்கிறது. இப்படிக் கெட்ட கொழுப்பை அதிகரிப்பதால், இதுவும் இதயத்துக்கும் மூளைக்கும் ஆகாத பொருள்தான்.

உடலில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு இருக்கும் விகிதத்தைக் கண்டறிய ஒரு பரிசோதனை உதவுகிறது. அதுதான், லிப்பிட் ஃபுரொபைல் (Lipid Profile ) பரிசோதனை
மேற்சொன்ன ஐந்து கொழுப்புகளையும் ரத்தத்தில் பரிசோதித்துப் பார்ப்பதற்கு ‘லிப்பிட் புரொஃபைல்’ பரிசோதனை என்று பெயர்.

யாருக்குத் தேவை?

# 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாரடைப்பு நோய் வந்துள்ள குடும்பத்தில் பிறந்தவர்கள் வருடத்துக்கு ஒருமுறை இதைச் செய்துகொள்ள வேண்டும்.

# உடல்பருமன், இதய நோய், நீரிழிவு நோய், உயர் ரத்தஅழுத்தம், ரத்த மிகைக்கொழுப்பு உள்ள வர்கள், புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள் இந்தச் சோதனையை வருடத்துக்கு இரண்டு முறை செய்துகொள்ள வேண்டும்.

# ரத்தக் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மொத்தக் கொலஸ்ட்ராலை மட்டும் பரிசோதித்துக் கொள்ளலாம்.

எப்படிச் செய்வது?

# இந்தப் பரிசோதனையை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.
# இவர்கள், பரிசோதனைக்கு முந்தைய மூன்று நாட்களுக்கு வழக்கமான உணவைச் சாப்பிட்டுக்கொள்ள வேண்டும்.
# பரிசோதனைக்கு முதல் நாள் இரவு உணவை முடித்த பிறகு, எதையும் சாப்பிடக் கூடாது (ஃபாஸ்டிங்).
# எட்டு மணி நேரம் முதல் 12 மணி நேரம் கழித்து, அதாவது மறுநாள் காலையில் பரிசோதனைக்கு வர வேண்டும்.
# பரிசோதனைக்கு வரும்போது மது அருந்தியிருக்கக்கூடாது; புகைபிடிக்கக்கூடாது.

கொழுப்பு வகை சரியான அளவுகள்

# மொத்தக் கொலஸ்டிரால்150 முதல் 180 மி.கி. / டெ.லி. வரை
# எல்.டி.எல். 100 மி.கி. / டெ.லி.க்குக் குறைவாக
# ஹெச்.டி.எல். ஆண்களுக்கு 40 மி.கி. / டெ.லி.க்கு அதிகமாக;
# பெண்களுக்கு 50 மி.கி. / டெ.லி.க்கு அதிகமாக
# வி.எல்.டி.எல் 30 மி.கி. / டெ.லி.க்குக் குறைவாக
# டிரைகிளிசெரைட்ஸ்150 மி.கி. / டெ.லி.க்குக் குறைவாக
இந்த அளவுகளில் கொழுப்பு அதிகம் எனத் தெரிந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி கொழுப்பைக் குறைப்பதற்கான மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். மேலும் கொழுப்பு குறைந்த உணவைச் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, உடல்பருமனைக் குறைப்பது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களும் தேவை.

கவனம் தேவை

# ஹெச்.டி.எல். 60 மி.கி. / டெ.லி.க்கு அதிகமாக இருப்பவர்களுக்கு இதயத்துக்கு வரவுள்ள ஆபத்தை உடல் இயற்கையாகவே தடுத்துவிடும்.

# எல்.டி.எல். 160 மி.கி. . டெ.லி.க்கு அதிகமாக இருப்பவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் இதயத்துக்கு ஆபத்து வரலாம்.

(
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர் 

தொடர்புக்கு: gganesan95@gmail.com


நன்றி :- தி இந்து