Tuesday, August 30, 2016

கணவரை சிக்க வைக்க மகள் கடத்தப்பட்டதாக நாடகமாடிய தாய் !



வடமேற்கு தில்லியில் தனது 2 வயது மகளை உறவினர் வீட்டில் தங்க வைத்துவிட்டு, அவர் கடத்தப்பட்டதாக தாய் நாடகமாடிய சம்பவம் அம்பலமாகியுள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஸ்வரூப் நகரைச் சேர்ந்த ஒரு பெண், போலீஸில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு புகார் அளித்தார். அதில், "கருத்துவேறுபாடு காரணமாக எனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வருகிறேன். எனது 2 வயது குழந்தையுடன் மார்க்கெட்டுக்கு சென்றிருந்த போது, அவளை யாரோ கடத்தி சென்றுவிட்டனர். எனது கணவர்தான் கடத்தியிருக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

அதனடிப்படையில் போலீஸார் விசாரணையை தொடங்கினர். சிறுமியின் புகைப்படத்தை தருமாறு அந்த பெண்ணிடம் கேட்டனர். ஆனால், அந்த பெண்ணோ, அவரது குடும்பத்தினரோ சிறுமியின் புகைப்படத்தை தரவில்லை. இது, போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், மார்க்கெட் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில், அந்த பெண் தனியாக செல்வது போன்றே காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதையடுத்து, புகார் அளித்த பெண்ணிடம் போஸீஸார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த 2 வயது குழந்தையை யாரும் கடத்தவில்லை என்பதும், அப்பெண்ணின் உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. தனது கணவரை போலீஸில் சிக்க வைக்க வேண்டும் என்றே அப்பெண் கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது என்றார் அந்த அதிகாரி.

நன்றி :- தினமணி

No comments:

Post a Comment