Tuesday, August 30, 2016

பொறியியல் கல்லூரி மாணவி அடித்துக் கொலை: முன்னாள் மாணவர் கைது !

கரூர் அருகே செவ்வாய்க்கிழமை தனியார் பொறியியல் கல்லூரிக்குள் நுழைந்து மாணவியை அடித்துக் கொன்ற முன்னாள் மாணவரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் சோனாலி (19). கண்ணன் இறந்து விட்டார். சோனாலி, கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள வெங்களூரைச் சேர்ந்தவர் உதயகுமார் (21). இதே கல்லூரியில் படித்த இவர், சோனாலியை ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மூன்றாமாண்டு படித்து வந்த உதயகுமார் மீது கல்லூரி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாகவும், இதனால் அவர் கடந்த நவம்பர் மாதம் முதல் கல்லூரிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கல்லூரிக்கு வந்த உதயகுமார், வகுப்பறைக்குச் சென்று சோனாலியிடம் தனது காதலை ஏற்குமாறு கூறியுள்ளார். ஆனால், சோனாலி அதை ஏற்க மறுத்ததால், ஆத்திரமடைந்த உதயகுமார் அங்கிருந்த மரக்கட்டையால் சோனாலியின் தலையில் தாக்கியுள்ளார். இதைத் தடுக்க முயன்றவர்களையும் தாக்கிவிட்டு உதயகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம்.
இதில், பலத்த காயமடைந்த சோனாலியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சோனாலி உயிரிழந்தார். கரூர் நகர போலீஸார் வழக்குப் பதிந்து உதயகுமாரைக் கைது செய்தனர்.
நன்றி :- தினமணி

No comments:

Post a Comment