Tuesday, August 30, 2016

தற்கொலைக்கு முயன்றவர் பிழைத்தார்: நடந்து சென்ற மூதாட்டி இறந்தார்



சென்னை: தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து மாடியில் இருந்து கீழே குதித்த இளைஞர், மூதாட்டி மீது விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி இறந்தார்.

சென்னை அசோக்நகர் நல்லான்குப்பத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 2-ஆவது தளத்தில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் செல்வம் (35). அவர் வீட்டின் அருகே சாரதா (75) என்பவர் வசித்து வந்தார்.

செல்வத்துக்கும், அவர் மனைவிக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமையன்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே சென்று மது அருந்திவிட்டு வீடு திரும்பியுள்ளார். இதை அவரது மனைவி கண்டித்ததால் மனமுடைந்த செல்வம், தற்கொலை செய்வதற்காக குடியிருப்பின் 4-ஆவது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்துள்ளார். அப்போது தரைதளத்தில் சென்று கொண்டிருந்த மூதாட்டி சாரதா மீது செல்வம் விழுந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் சாரதாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் செல்வம் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து குமரன்நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தற்கொலைக்கு முயன்றது மற்றும் கொலை வழக்கில் கைதாகும் நிலையில் ஓட்டுநர் செல்வம் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நன்றி :- தினமணி


No comments:

Post a Comment