Wednesday, August 31, 2016

ஒருதலைக் காதலால் கொடூரம்: இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை ! -இந்து


தூத்துக்குடியில் தன்னை காதலிக்க மறுத்த இளம் பெண்ணை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:

தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்த நியூமேன் மகள் என்.பிரான்சினா (24). இவர் சண்முகாபுரத்தில் உள்ள ஒரு தனியார் மழலையர் பள்ளியில் 3-ம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

பிரான்சினாவை அதே பகுதியைச் சேர்ந்த கீகன் ஜோஸ் (26) என்ற இளைஞர் ஓராண்டுக்கும் மேலாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பலமுறை பிரான்சினாவிடம் காதலைச் சொல்லியும் அவர் கீகனை ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்து தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார் கீகன்.

ஒருகட்டத்தில் கீகனின் தொல்லை தாங்காமல் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் பிரான்சினா. அந்தப் புகாரின் பேரில் கீகனை வரவழைத்து எச்சரிக்கை செய்துள்ளனர் போலீஸார்.

சிறிது காலம் தொந்தரவு கொடுக்காமல் இருந்திருக்கிறார் கீகன். இந்நிலையில்தான் பிரான்சினாவுக்கு வீட்டில் அவருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டது.

வரும் 8-ம் தேதி பிரான்சினாவுக்கு திருமணம் நடைபெறவிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த கீகன் கடந்த ஒரு வாரமாகவே பிரான்சினா செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்திருக்கிறார்.

பிரான்சினா ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்லும் முன் அருகில் இருக்கும் தூய பேதுரு தேவாலயத்தில் பிரார்த்தனை செய்துவிட்டுச் செல்வது வழக்கம். அதேபோல் இன்றும் அவர் தேவாலயத்துக்குச் சென்றார். காலை 8.30 மணியளவில் தேவாலயத்துக்குள் இருந்த பிரான்சினாவை கீகன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் அவரது கழுத்து, தலை, முகம் ஆகிய பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. அங்கிருந்து மீட்கப்பட்ட அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அடுத்த சில மணி நேரங்களில் அவரது உயிர் பிரிந்தது.

தேவாலயத்தில் பிரான்சினாவை வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற கீகன் அவரது அண்ணன் வீட்டுக்குச் சென்று அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

No comments:

Post a Comment